கவிதை நடையில் "தங்கமீன்கள்"
மகிழ்ச்சி:
இரண்டாம் தாயாய் செல்லம்மாவை தோளில் சுமந்த
கல்யாணியின் கபடமில்லா தெளிவுரையை
வெள்ளித்திரையில் கண்டேன்!
பாத்திரபடைப்பு:
கல்யாணி என அழைக்கபடும் தந்தைக்கும்
வடிவு என்ற தாயுக்கும் சிறு வயது காதலில்
பிறந்த செல்லம்மா கதாநாயகியாய்
கதையில் வரும் உறவுகள்
கதாநாயகர்களாய்!
தந்தைக்கும் மகளுக்கும் உள்ள பாசத்தை மட்டும் கூறவில்லை
ஒரு ஆண்மகனின்
தந்தை,தாய்,மாணவி,அண்ணன் மற்றும் நண்பன்
என்ற உறவுகளோடு தன்னையே வருத்திக்கொள்ளும்
வாழ்வாதாரத்தின் போராட்டம்!
செல்லம்மாவும் கல்யாணியும்:
கிளிபிள்ளையின் கேள்விகளுக்கு
அன்பாய் அரவணைத்து கூறினால்
அப்பிள்ளையும் அறிவாளிதான்!
எது என்ன விலை என்று தெரியும் போது
அக்குழந்தைகள் தந்தை சுமை அறிந்து
கேட்பதில்லை!
ஆனால் அது தெரியும் வரை முடிந்தவரை
முடியாது என்ற வார்த்தையை கூற
வருத்தப்படும் கல்யாணி!
தந்தை கூறினால் அது உண்மையாக தான் இருக்கும்
அவர்போல் கரம் பிடித்து கூட்டிச்செல்லும் ஒருவர் வந்தால்
அவர் கூறுவதையும் கேட்டுக்கொள்ளும் செல்லம்மா!
அதுவரை ஒரு கேள்விக்கு பல பதில்கள் உண்டென
கூறுவதில் கெட்டிக்காரி அவள்!
அதில் அர்த்தம் புரிந்தவன் கைதட்டுகிறான்!
இசையும் ஒளிப்பதிவும்:
ஒளி சேர்க்கையில் ஒலி விளையாடியது
கரடு முரடான பாதையின் காட்சியில் பசுமை
இசை சேர்ந்தபின் அதன் செழுமையில்
கண்களும் செவிகளும் அதன் காட்சிக்குள்ளயே
சஞ்சரிக்கும்!
பிரிவும் கண்ணீரும் ஏற்படுத்தும் வலியை
இசை தாங்கி செல்கிறது கூடவே மனமும்
இறுகியது!
எழுத்தும் இயக்கமும்:
தமிழ் கல்வியும் அதன் நிலைமையும் தான் கற்றது தமிழ்!
தனியார் பள்ளியும் அதனால் தனியாய் போன தந்தையும் தான்
தங்கமீன்கள்!
பணமும் மனமும் ஒன்று சேரும் போது வாழ்வியலில்
சந்தோஷத்தை இழக்கும் என
கவிதை நடையில் தன் கதை நெறியில்
விளக்கபாடம் எடுத்ததற்கு
கண்களில் நீர் ததும்ப
நன்றிகள்!
இதற்குமேல் இந்த உறவை பற்றி பதிவு செய்யப்பட்டால்
பணம் கொடுத்து படம் பார்க்கும் உங்களை நான் வழிநடத்தி
சென்றது போல் ஆகிவிடும்!
பலகோடி பாராட்டுகள் கேக்கட்டும் இந்த
உண்மை படைப்பாளியின் உன்னத படைப்பிற்காக!
என்றும் அன்புடன்,
ரசல்